Friday, December 31, 2010

காவிரி சிக்கல் இனப்பகையால் வருவது;கிருஷ்ணா நதிநீர் தீர்வு இன ஒற்றுமையால் விளைவது;



வெளியாகியுள்ள கிருஷ்ணா நதி நீர் நடுவர்மன்ற தீர்ப்பின்படி ஆந்திரா 1001 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடகம் 911 டி.எம்.சி. தண்ணீரும்
மகாராஷ்டிரா 666 டி.எம்.சி தண்ணீரும் பெறுகின்றன.

தீர்ப்பின் படி ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைத்திருந்தாலும் மற்ற மாநிலங்கள் பெரும் எதிர்ப்பு ஏதும்மின்றி ஏற்றுக் கொண்டிருகின்றன.மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பு தமிழகத்திற்கு வெறும் 205 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்கியது,(தமிழகம் 489 டி.எம்.சியை கோரியது)காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் அதையும் குறைத்து 176 டி.எம்.சி நீரை ஒதுக்கி தமிழகத்தை வஞ்சித்தது.

தமிழகத்தை கேவலமாக வஞ்சித்த இந்த தீர்ப்பைக்கூட கர்நாடகம் ஏற்கவில்லை.ஒரு சொட்டு தண்னீர் கூட தமிழகத்திற்கு தரமாட்டோம் என்று கர்நாடகம் வெளிப்படையாக சட்டமன்றத்தில் அறிவிக்கிறது.தமிழகத்திற்குள் வழிந்து வரும் (ஒகேனக்கல்) தண்னீரை குடிநீருக்கு பயன்படுத்துவதை கூட கர்நாடகம் எதிர்க்கிறது.

வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அரசு கர்நாடகத்திற்கு துணையாகவே செயல்பட்டது.தமிழகத்தை ஆண்டவர்கள் தமிழக நலனை பலிகொடுத்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.

காவிரி சிக்கலில் கர்நாடகத்திற்கு துணை நிற்பது போலவே பாலாற்று சிக்கலில் ஆந்திராவுக்கும்,முல்லை பெரியாறு அணை சிக்கலில் மலையாளிகளுக்கும் இந்தியா வெளிப்படையாகவே உதவிசெய்கிறது.

அனைவருக்கும் ஏன் தமிழினத்தின் மீது இவ்வளவு பகை?தமிழகத்தின் மீது இந்தியாவும் அதன் வழிவந்த மாநிலங்களும் காட்டும் இனப்பகையை தமிழக உழவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே தமிழக ஆற்றுநீர் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------------------------------
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். -------------------------------------------------------------------------------------------------------------

இருமடங்காகும் தமிழக உழவர்களின் தற்கொலை

2009-ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் தமிழக உழவர்களின் தற்கொலைகள்.

கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களில் உழவர்களின் தற்கொலைச் சாவுகள் குறைந்துவரும் வேளையில் 2009-ஆம் ஆண்டில் தமிழக உழவர்களின் தற்கொலை எண்ணிக்கை 512-லிருந்து 1060 ஆக உயர்ந்துள்ளது.அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அவலம்.(இந்து நாளிதழ் 28.12.10)
தமிழக உழவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருத்தல் ,நீர் இறைவைகளுக்கு இலவச மின்சாரம் தருதல்,ஏறக்குறைய நிலவரி இல்லை என்ற நிலை இருப்பினும் உழவர்களின் தற்கொலைகள் மட்டும் குறையவில்லை.

ஆற்றுநீர் உரிமையை நிலைநாட்ட அக்கறை அற்ற தமிழக ஆட்சிகள்.தமிழகத்தை வஞ்சிக்கும் தில்லி ஆட்சி.பருவமழை சீற்றத்தின் மடியில் தமிழக உழவர்கள்;பாசன வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி,பராமரித்து,முறையான நீர் மேலாண்மை செய்யாத அரசுத்துறைகள்;இதனால் ஓரிரு நாள் மழையாலேயே வெள்ளக்காடாகும் விளைநிலங்கள்;பயிர்கள் சேதமடையும் உழவர்களுக்கு பயன் தராத காப்பீட்டு முறை;ஆள் பற்றாக்குறை;உயரும் உற்பத்தி செலவுகள் இவற்றையெல்லாம் மீறி விளையும் விளைச்சலுக்கும் இலாபமற்ற விலை.விளைவு மேலும் மேலும் உழவன் கடனாளியாகிறான்.

ஊருக்கு உணவளிக்கும் உழவன் டிராக்டர் போன்ற உழுவை இயந்திரங்கள் வாங்க கடனளிக்க கூட்டுறவு வங்கிகளும்,அரசுத்துறை வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன.இதனால் அதிகவட்டிக்கு தனியார்துறை வங்கிகளில் கடன்பெற வேண்டிய கட்டாயம்.

இப்படி எல்லா முனைகளிலும் தாக்கப்படும் தமிழக உழவர்கள் விழித்தெழிந்து போராட வேண்டும்;வேளாண்மக்கள் வாழப்பிறந்தவர்கள்:வாழ்விப்பவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் --குறள்--உழவு
------------------------------------------------------------------------------------------------------

உழவர்கள் ஊர்வலம்,ஆர்ப்பாட்டம்

Thursday, December 23, 2010

சுற்றறிக்கை 2/10

கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தி,பொருளாதார தடை விதித்து காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பின் படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறும் நீரைப்பெற்று ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஆற்றல் அற்ற தமிழக அரசுகள்;நமக்குரிய காவிரிநீரை போராடி பெற வேண்டும் என்ற அக்கறை இல்லாத உழவர்கள்; தடுக்க இயலாமல் காவிரியில் வழிந்துவரும் நீரைக் கொண்டு பருவம் தவறி பயிரிட்டாலும்,நீர் மேலாண்மையிலும்,வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பதிலும் தமிழக அரசுகள் காட்டும் அலட்சியத்தால் ஓரிரு நாள் மழையாலேயே ஏற்படும் பயிர்சேதம்; பயிர் சேதமடையும் உழவர்களுக்கு பயன்தராத காப்பீட்டு முறை; இவற்றையெல்லாம் மீறி விளையும் வேளாண் பொருட்களுக்கு இலாபமற்ற விலை; இதனால் நிலத்தை விற்றுவிட்டு வேளாண்மையை விட்டு வெளியேறினால் போதும் என்ற பரிதாப நிலையில் வேளாண் குடும்பங்கள்; இம்மண்ணையும் இழந்தபின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கசப்பான கேள்விக்கு விடை அறிய விரும்பாத வேளாண் மக்கள்,இச்சூழலில் தான் தமிழக வேளாண்மையையும் மண்ணையும் காக்கும் உறுதியுடன் தமிழக உழவர் முன்னணி போராடி வருகிறது.

நமது அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் 19.12.10 அன்று தலைவர்.கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.செயலாளர் சி.ஆறுமுகம் நடந்துள்ள பணிகள் குறித்தும் எதிர்காலப்பணிகள் குறித்தும் விளக்கினார்.

முதலாவதாக த.உ.மு செயற்குழு உறுப்பினர் பொறியாளர் என்.ஜெயபாலன் தான் தொகுத்த புள்ளிவிவரப்படி ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்கு செலவு ரூ.21850/- என்றும் விளைச்சல் சராசரி 18 குவிண்டால் என்றும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைத்தப்படி 50 விழுக்காடு இலாபம் கிடைக்க வேண்டுமெனில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000/- கிடைக்க வேண்டும் என்று விளக்கினார்.

வேளாண்மைக்கு ஆகும் செலவை முறையாக கணக்கிடும் பழக்கம் இல்லாததால் ஒரு ஏக்கருக்கு ரூ.10000/- (அ) 12000/- செலவாவதாக உழவர்களே கூறும் பரிதாப நிலை இருப்பது கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

பெண்ணாடம் பகுதி தமிழக உழவர் முன்னணியினரும் கரும்புக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.3000/- வழங்கப்பட வேண்டும் என்றனர்.இதில் கரும்புசக்கை எரிபொருளாக பயன்படுத்தப்படுவது,கழிவுப்பாகுவிலிருந்து கிடைக்கும் ட்ரை அய்ஸ்,உணவுக்கான ஈஸ்ட்,மருந்துகள்,சிட்ரிக் ஆசிட்,எரிசாராயம் போன்றவற்றால் ஆலைக்கு கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படவில்லை. இவற்றை கணக்கில் கொண்டால் ஆலை டன் ஒன்றுக்கு ரூ.3000/-க்கும் மேல் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிவரும்.ஆனாலும் நமது உடனடி கோரிக்கையாக டன் ஒன்றுக்கு ரூ.3000/- கோருகிறோம்.

ஆகவே ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000/-ம்மும் ஒரு டன் கரும்புக்கு ரூ.3000/-ம்மும் கோரி,வரும் 3.01.2011 அன்று காலை சிதம்பரத்தில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.வேளாண்மை பொருட்களுக்கு இலாபமான விலை கிடைத்தால்தான் நம் குடும்ப செலவுகளையும்,கல்வி,மருத்துவம் போன்ற செலவுகளையும் ஈடுகட்ட முடியும்.நம் மண்ணையும் காத்துக்கொள்ள முடியும்.

தமிழக உழவர் முன்னணி கட்சி சார்பற்றது: எந்த தேர்தல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கும் அமைப்பல்ல.வேளாண்மையையும் மண்ணையும் காக்க உறுதியுடன் போராடும் நம் அமைப்பை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை.ஆகவே ஊரில் உள்ள அனைத்து உழவர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பெரும் திரளாக உழவர்களைத் திரட்டும் வகையில் பணியாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, December 16, 2010

வெள்ளச்சேதம் மத்தியக்குழு வருகை,தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்


வடகிழக்கு பருவமழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பயிர்ச்சேதம்,பொருட்சேதம் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அமைச்சர்களும்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தினரும் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர்.பயிர்கள் மூழ்கி கிடந்த போது பார்வையிட்டு பாதிப்பின் அளவை புரிந்துவைத்திருப்பவர்கள் தமிழக அமைச்சர்களும் I.A.S அதிகாரிகளுமே ஆவர்.


இவர்கள் பரிந்துரைப்பதை ஏற்காமல் வெள்ளம் வடிந்து பின் ஏற்பட்ட மழையால் பாதிப்பின் சுவடு மறைந்துவிட்டுள்ள நிலையில் காலங்கடந்து மத்தியக்குழு பார்வையிட வருவதால் எப்பயனும் இல்லை.இது ஒரு தேவையற்ற சடங்கு.



10நாட்களுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்து வெள்ளம் வடிந்ததும் மிச்சம் இருக்கும் பயிரை காப்பாற்றி விடலாம் என்கிற ஆசையில் மீண்டும் உரத்தை போட்டு உழவர்கள் பயிரை பசுமையாக மாற்றி இருக்கிறார்கள்.ஆனால் இப்பயிர்கள் விளைந்தாலும் வழக்கமான மகசூலில் நான்கில் ஒரு பங்குக்கூட கிடைக்காது என்பது வேளாண்மை தெரிந்தவர்களுக்கு தெரியும்.
இந்த உண்மை தெரிந்தும் வேறுவழியற்ற உழவன் வயலில் உரத்தைக் கொட்டி இயற்கையோடு போராடுகிறான்.

நாற்சக்கர வாகனங்களில் பவனி வரும் இந்திய அரசு அலுவலர்களுக்கு இது புரியாது,பெரும் பாதிப்பு ஏதும் இல்லை என்றுதான் கூறுவார்கள்.



இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் கூற்றை ஏற்காமல் தனக்கென்று வரிவசூல் செய்யும் மண் இல்லாத மத்திய அரசு ஒரு சில அலுவலர்களை அனுப்பி ஆய்வு செய்வதென்பது தமிழக மக்களையே அவமதிக்கும் செயலாகும்.பிரிட்டிஷ் ஆட்சியின் அணுகுமுறையையே இந்திய அரசும் கடைப்பிடிக்கிறது.இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.


தமிழக உழவர்கள் மத்தியக்குழுவை புறக்கணிக்க வேண்டும்.தமிழக அரசு கொடுக்கும் அறிக்கையை ஏற்று பணமளிக்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

Tuesday, December 14, 2010

வெள்ள நிவாரணம் தமிழக அரசுக்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்


ஓரிரு நாள் மழையால் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதங்களுக்கு இயற்கையின் எதிர்பாராத சீற்றம் முதன்மைக் காரணமல்ல.தமிழக அரசின் கொள்கை முடிவுகளும்,நீர் மேலாண்மையிலும் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பதிலும் தமிழக அரசு காட்டிய அலட்சியமுமே காரணம்.

கர்நாடகத்திற்கு பொருளாதார தடை விதித்து அரசியல் நெருக்கடி கொடுத்து காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி மாதந்தோறும் நீரைப்பெற்று ஜூன்-12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருந்தால் ஆண்டுதோறும் ஏற்படும் சேதத்தின் அளவு குறைந்திருக்கும்.

அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் துனையுடன் தான் நீர்நிலைகள், வடிகால்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. புறவழிச்சாலைகளும், மேம்பாலங்களும், புதியகுடியிருப்புகளும் கட்டப்படும் போது அடைக்கப்படுவது வாய்கால்களே.ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் ஆணையிட்டாலும் செயலாவதில்லை.

உழவர்களுக்கு உரிமையான வீராணம் ஏரி சென்னை குடிநீர் வடிகால் வாரிய பொறுப்புக்கு சென்றுவிட்டதால் ஏரியில் ஆண்டு முழுவதும் கிட்டத்திட்ட முழுக்கொள்ளளவு வரை நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விடப்படுவதில்லை,சம்பா பயிருக்கு கூட முறையாக நீர் விடாமல் நாற்றங்கால்கள் காய்ந்தன. சோழ கங்கை என அழைக்கப்படும் பொன்னேரி,நாரை ஏரி,வீராணம் ஏரி போன்ற ஏரிகள் தூர் வாரப்படாததாலும்,கரைகள் பலப்படுத்தப்படாததாலும், வடிகால்கள் பராமரிக்கப்படாததாலும் வீராணத்திலிருந்து திறந்து விடப்படும் வெள்ள நீரால் ஒருபோக சம்பா பயிரையும் உழவர்கள் இழந்து நிற்கிறார்கள்.காவிரியில் தமிழக உரிமையை மறுக்கும் கர்நாடகம் வெள்ள வடிநிலமாக தமிழக வேளாண்நிலங்களை மாற்றி வஞ்சிப்பது போல் தமிழக அரசும் வீராணம் உழவர்களை வஞ்சிக்கிறது.

தனது செயல்களால் தமிழக உழவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசே இழப்பை ஈடுகட்டும் பொறுப்பை ஏற்பதே இயற்கை நீதி.ஏதோ இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஏற்பட்டது போலவும் அதை அரசு ஓரளவு ஈடுகட்டுகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறது.இது ஏற்புடையதல்ல.மறுசாகுபடிக்கு தேவையான விதை,உரம்,போன்ற இடுபொருள்களை இருப்பு வைத்து வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவால் உழவர்களுக்கு எப்பயனும் இல்லை.

தமிழக உழவர் முன்னணி எடுத்த கணக்கெடுப்பின் படி நெல் சாகுபடி செய்ய ஏக்கருக்கு குறைந்தப்பட்சம் ரூ.20,500/- செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வளவு பணத்தை செலவழித்துள்ள உழவன் அப்பணம் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைப்படி 50 விழுக்காடு இலாபத்துடன் திரும்பக்கிடைத்தால் மட்டுமே அடுத்த சாகுபடிச்செலவையும் குடும்பச்செலவையும் ஈடுகட்ட முடியும்.

தமிழக உழவர் முன்னணி கோரி வருவது போல் ஏக்கர் வாரியாக பயிர்க்காப்பீடு செய்யும் முறையிருந்தால் உழவர்கள் நிவாரணம் கோரி அரசிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை.

ஆகவே தமிழக அரசின் செயல்களால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு 50 விழுக்காடுக்கு மேல் சேதம் இருந்தால் ஏக்கருக்கு ரூ.3200/- வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவை தமிழக உழவர் முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.உடனடியாக ஏக்கருக்கு குறைந்தப்பட்சமாக நெற்பயிருக்கு ரூ.20,000/- வழங்க வேண்டும் எனவும் கோருகிறது.

Monday, December 6, 2010

அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முழு இழப்பீடு தரும்படி கோரிக்கை!



ஓரிரு நாள் தொடர் மழைபெய்தாலே தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாகிறது. ஆண்டுதோறும் ஏற்படும் பயிர்சேதமும். உயிர்ச்சேதமும். பொருளாதார இழப்பும் சொல்லி மாளாது.



இது தொடர்பாக தமிழக உழவர் முன்னணி நீர் நிலைகளில்,பாசன வாய்க்கால்களில்,வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும்படி பலமுறை மனு அனுப்பியும் போராட்டங்கள் நடத்தியும் வந்திருக்கின்றது.சிறந்த முறையில் பராமரிக்கப்படும் அதிகாரவர்க்கத்தையும் காவல் துறையையும் பெற்றிருக்கும் தமிழக அரசு உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

அரசின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் முழ்கி அழகிவிட்டன. சூல்கொண்டு நிற்கும் பயிரும் பதராகப் போவது நிச்சயம்.
மேலும் வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது என்பதன் பெயரால் ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவுக்கு ஏரியில் நீர் தேக்கிவைக்கப்படுகிறது. அதிலிருந்து குறுவை சாகுபடிக்கு காலத்தில் நீர் திறந்துவிடப்படுவதும் இல்லை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீராணம் ஏரியில் 40 அடிக்கும் குறைவாக நீர் தேக்கப்படவேண்டும் என்ற உழவர்களது கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. வீராணம் ஏரிக்கு மேற்கே பொழியும் மழைக்கு வடிகாலாக சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் இருக்கின்றன. நீர் மேலாண்மையையும். வடிகால் பராமாரிப்பையும் அரசு நிர்வாகம் முறையாக செய்யாததால் ஆண்டு தோறும் பயிர்கள் நீரில் முழ்கி பெருத்த சேதம் அடைகின்றன.
வேளாண்மைக்கு முழுமையாக செலவழித்துவிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் வேளையில் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயிர் சேதமடையும்போது உர்வர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை வார்த்தைகளால் கூற இயலாது.
வீராணத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் முழுவதும் பாதிக்கப்பட்ட திருநாரையூர், சிறகிழந்த நல்லூர், நெய்வாசல், கீழவன்னியூர், மேலவன்னியூர், குமராட்சி, மெய்யாத்தூர், தாவத்தாம்பட்டு, புதுபூலாமேடு. சிவாயம். நாஞ்சலூர், வையூர், கண்டியாமேடு, அகரநல்லூர், பழையநல்லூர், பிள்ளைமுத்தாப்பிள்ளைச்சாவடி, அத்திப்பட்டு, வடக்கு மாங்குடி,தெற்குமாங்குடி,வல்லம்படுகை, பொன்னந்திட்டு. சி.மானம்பாடி. ஆகிய ஊர்களில் உள்ள உழவர்களுக்கு ஏக்கருக்கு ரு: 20.000-? முழு இழப்பீட்டுத்தொகையாக வழங்கும்படி தமிழக உழவர் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில், திருச்சி நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக


சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில்,செயங்கொண்டம்,
திருச்சி சாலை (எண் 227) தேசிய நெடுஞ்சாலை துறையால் இருவழி பாதையாக மாற்றப்பட இருப்பதாக அறிகிறோம்.


சாலை அகலப்படுத்தப்படுவதை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் வரை தற்சமயம் புழக்கத்தில் சாலையின் இருபுறமும் பாசனம் (வடக்கு ராசன் வாய்க்கால்,வெள்ளியங்கால் ஓடை,கான்சாகிப் வாய்க்கால்) மற்றும் வடிகால் வாய்கால்கள் செல்லுகின்றன.

இருவழிசாலை அமைக்கும் பொழுது பாசன்,வடிகால்
வாய்கால்களின் அகலம் பாதிக்கப்படாமல் அமைக்கும்படி கோருகிறோம்.

ஏற்கனவே சிதம்பரம் புறவழிச்சாலையின் தடுப்பாலும்,ஆங்காங்கே உருவாகியுள்ள நகர்களாலும் வெள்ளநீர் வடிவது பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.சாலையின் விரிவு காரணமாக பாசன வடிகால் வாய்க்கால்களின் அகலம் குறைக்கப்பட்டால் சேதத்தின் கடுமை மேலும் அதிகமாகும்.

ஆகவே உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையை விரிவு படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, November 4, 2010

உழவர்களின் தீர்ப்புக்காக!

காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும்படி வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி சார்பில் தமிழக முதலமைச்சருக்கு 5.08.10-ல் அனுப்பப்பட்ட மனுவும் அதற்கு முதலமைச்சர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலும் தமிழ்நாட்டு உழவர்களின் ’தீர்ப்புக்காக’ முன்வைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
படங்களை click மற்றும் zoom செய்து பார்க்கவும்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
------------------------------------------அய்யன் திருவள்ளுவன்

Friday, October 29, 2010

கரைபுரண்டு ஓடினாலும் காவிரி நீர் கிடையாது!கர்நாடக அரசு கதவை சாத்தியது, இயலாத ஆட்சி நடத்தும் தமிழக அரசே! பொதுப்பணித்துறை அலுவலகத்தை இழுத்து மூடு!



கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் 27.10.2010 அன்று நடைப்பெற்ற கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டம் “காவிரி நீரை திறந்து விடவே முடியாது; அணை நிரம்பி வழிந்தால் தானாகவே தமிழகதிற்கு நீர் ஓடும்”,என்று அறிவித்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை “12408 அடி மொத்த உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 124.7 அடிக்கு தண்ணீர் உள்ளது.கர்நாடக கவிரி அணைகளில் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சியில் 100 டி.எம்.சி.தண்ணீர் நிரம்பியுள்ளது.ஆயினும் இதை கர்நாடகதின் பாசன மற்றும் பெங்களூர்,மைசூர் குடிநீர் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வோம்.தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அணை நிரம்பினால் இயற்கையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழிந்து ஓடும்”என்று அறிவித்தார்.

இயலாத ஆட்சியாய் தமிழக அரசு இருப்பதால் அயலார் காவிரி உரிமையை எளிதாக மறுக்கிறார்கள்.

நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய காவிரிநீரை பெற்றுத்தர முயலாத,தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் தமிழகத்தில் செயல்படுவதால் இருக்கிற தண்ணீருக்கு உழவர்களிடையேயும்,உழவர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் நிகழப்போவதிலை.

எனவே காவிரி நீரைப்பெற்றுத்தர இயலாத தமிழக அரசு பொதுப்பணித்துறை அலுவலகங்களை இழுத்து மூடும்படி தமிழக உழவர் முன்னணி வலியுறுத்துகிறது.

-------------------------------------------------------------------------------------
இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம்தர விரும்பவில்லை --- முதலமைச்சர் மு.கருணாநிதி.
------------------------------------------------------------------------------------------நன்றி : தினமணி 29.10.2010

Sunday, October 17, 2010

வீராணம் ஏரி பாசன,கடைமடை கிராமங்கள் போதுமான நீரின்றி பயிர்கள் காய்வதற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்


வீராணம் பாசன பகுதி உழவர்கள் குறுவைப்பயிரை இழந்து பல வருடங்களாகிவிட்டன.
பயிரிடப்படும் சம்பா பயிருக்கும் காலம் கடந்துதான் வீராணம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது.

பாசனத்திற்கு போதுமான அளவு நீர் திறந்துவிடாததாலும் பாசன வாய்க்காலில் உள்ள செடி,கொடி,புதர்கள் அகற்றப்படாததாலும் கீரப்பாளையம்,மேலமூங்கிலடி, தையாக்குப்பம், கான்சாகிப்மண்டபம்,அம்பலத்தாடி குப்பம், மேலசொக்கனாதன்பேட்டை, பாலூத்தாங்கரை, கீழமூங்கிலடி,வாள்காரமேடு,கண்ணங்குடி,மடப்புரம் போன்ற கடைமடை கிராமங்களில் உள்ள நாற்றங்கால்களும் காய்ந்து வருகின்றன.நடவுக்கு போதிய நீரில்லை.நாற்றுக்கும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது.இதனால் உழவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

எனவே உழவர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் நட்டத்தை தவிர்க்க கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி தேவையான நீர் கிடைக்க பாசன வாய்க்காலில் உள்ள செடி,கொடி,புதர்களை அகற்றவும்,ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

Thursday, September 30, 2010

கிராம அளவில் வேளாண்பயிர் காப்பீடு திட்டம் தனியாரிடம் ஒப்படைக்க த.உ.மு எதிர்ப்பு!

கிராம அளவில் வேளாண் பயிர் காப்பீடுத் திட்டத்தை சில மாவட்டங்களில் நடைமுறைப் படுத்த இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் முன் வந்திருப்பதை தமிழக உழவர் முன்னணி வரவேற்பதாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழக உழவர் முன்னணி கோரி இருக்கிறது.

1.இக்காப்பீட்டுத்திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.

2.இக்காப்பீட்டுத் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது.

3.ஒரு கிராமத்தை அலகாகக் கொள்வது முன்னேற்றமே என்றாலும் “ஏக்கர்” வாரியாக பயிர்காப்பீடு செய்வதே உழவர்களுக்கு முழுமையான பலன் அளிக்கும் என்பதால் அடுத்து ஏக்கர் வாரியாக பயிர்காப்பீடு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக உழவர்களுக்கு முழுமையாக பலனளிக்கக் கூடிய மேற்குறித்த கோரிக்கைகள் நிறைவேற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

Wednesday, September 15, 2010

மாற்று மின் மோட்டார் வழங்கும் திட்டம் தமிழக உழவர் முன்னணி முதல்வருக்கு கோரிக்கை!


மின் சேமிப்பை கருதி தமிழக உழவர்களுக்கு மாற்றுமின் மோட்டார்கள் தமிழக அரசு வழங்க உள்ள திட்டத்தை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

இத்திட்டத்தால் பயன் பெரும் உழவர்களுக்கு கீழ்கண்ட வகையில் முன்னுரிமைக் கொடுத்து மின்மோட்டார்களை வழங்கலாம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் மின்மோட்டார் இணைப்புகளை அவை இணைப்பு பெறப்பட்ட ஆண்டின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரித்து மிகப் பழமையான மின்மோட்டார்களுக்கு முதலில் என்ற வரிசையில் மின்மோட்டார்களை வழங்கலாம்.அவ்வாறு வழங்கும்போது,மின் இணைப்பு பெற்ற தேதியில் இருந்த குதிரைத்திறன் தொடர்ந்து இன்று வரை பயன்பாட்டில் இருந்தால் அவர்களுக்கு முதலாவதாக வழங்கலாம்.

இடையில் கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார்களை அனுமதி பெற்று பொருத்தி இயக்கிவருபவர்களுக்கு அடுத்தும்,அனுமதிபெறாமல் கூடுதல் குதிரைச்சக்தியை பயன்படுத்தி வந்தால் அவர்களை தானே முன்வந்து அறிவிக்கும் திட்டத்தின் கீழ்.(Voluntary Disclosure Scheme) வாய்ப்புக்கொடுத்து கூடுதல் மின்சுமைக்கு அனுமதி வழங்கி அதற்கடுத்து அவர்களுக்கு மின்மோட்டார்கள் வழங்கலாம்.

மேலும் உழவர்களை பெரிய,சிறு,குறு விவசாயிகள் என்ற பாகுபாடு செய்யாமல் மின்மோட்டார்கள் பயன்படுத்தும் அனைத்து உழவர்களுக்கும் புதிய மின் மோட்டார் வழங்கவேண்டும்.

அடுத்து அண்மையில் புதிய மின் மோட்டாரை வாங்கி பொருத்தி பயன்படுத்திவரும் உழவர்களுக்கு மீண்டும் புதிய மின் மோட்டார் வழங்குவதற்கு பதிலாக பயன்பாட்டில் உள்ள மோட்டாருக்கு உரிய தொகையை பணமாக வழங்கிட வேண்டும்.

இத்திட்டத்தால் அனைத்து உழவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கிலும் சிலருக்கு சலுகைக் காட்டப்படுகிறது என்ற குறை கூறுதலை தவிர்க்கும் பொருட்டும் மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

Monday, September 6, 2010

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் ஆண்ட,ஆளுகின்ற இந்திய,தமிழக அரசுகளைக் கண்டித்துஆர்ப்பாட்டம்!



தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்று கொண்டிருக்கும் ஆண்ட,ஆளுகின்ற அரசை கண்டித்து நாகை மாவட்டம் மணல்மேட்டில் நடந்த தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

Saturday, September 4, 2010

ஆலைகளின் வேதியியல் கழிவுகளால் பாதிக்கபட்ட உழவர்கள் மீது கடலூர் காவல்துறை வழக்கு


கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகளால் நிலமும்,நீரும்,காற்றும் பாதிக்கப்படுவதை எதிர்த்து உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.ஆனால் அரசும் அதிகார வர்க்கமும் அசைவற்று இருந்து வருகின்றன.
அண்மையில் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட வேதியியல் ஆலைகழிவுகள் சங்கொலிகுப்ப கிராம பகுதியில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களை பாதித்துள்ளது;வேதியியல் கலந்த நீரைக் குடித்த இரண்டு மாடுகள் இறந்துள்ளன என்பதற்காக உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.சம்மந்தப்பட்ட ஆலைகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடலூர் முதுநகர் காவல்துறை போராடிய மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளது.இதை தமிழக உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.தமிழக உழவர் முன்னணி
1.பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்
2.வேதியியல் கழிவுகளை தூய்மைப்படுத்தாமல் வெளியேற்றும் ஆலைகளின் உரிமத்தை நீக்க வேண்டும்
3.புதிய வேதியியல் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசைக் கோருகிறது.

Sunday, August 22, 2010

நெல்லே உன் விலை என்ன?



Tuesday, August 17, 2010

உழவர்கள் விழிப்படைய வேண்டும்!!

06/07/2010 ல் விருத்தாசலத்திலும் 12/08/2010 ல் சிதம்பரத்திலும் நடந்த உளுந்து,பயிர் வேளாண்மை தொடர்பான அரசு ஏற்பாடு செய்த விவசாய கருத்தரங்கில் கலந்துக் கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மேட்டூர்,கல்லணை,கீழணை,வீராணம் ஏரி ஆகியவற்றிலிருந்து தண்ணீரை உடனே திறந்து விட கோரினார்களேயன்றி காவிரியில் இடைகாலத் தீர்ப்பின் படி மாதந்தோறும் கர்நாடகத்திடமிருந்து தமிழகம் பெற வேண்டிய நீர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.தமிழக உழவர் முன்னணி சார்பில் கலந்துக் கொண்ட செயலர் சி.ஆறுமுகம், கீரப்பாளையம் ஒன்றிய செயலர் என்.ஜெயபாலன் மட்டுமே கருத்தரங்கில் காவிரி உரிமை குறித்து புள்ளி விவரங்களுடன் பேசி தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.உழவர்கள் கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் சிந்திக்க வேண்டும்.

Saturday, August 7, 2010

செய்தி: ஒரு கிலோ அரிசி ரூ.100 - அதிர்ச்சித் தகவல்



ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!

(குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வந்த செய்தி...)

கிலோ அரிசி நூறு ரூபாயை ஓரிரு மாதங்களில் எட்டிவிடும். தமிழகத்திலும் பட்டினிச் சாவு நடக்கும்’’என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷனில் விற்கும் நிலையில்,இதை நம்ப முடியாமல், ‘எப்படி?’ என்று கேட்டோம்.

‘‘இந்தாண்டும் குறுவை சாகு படி, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும்.இப்போதைக்குத் தமிழகத்தின் நெல் பற்றாக்குறையை வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியால் சமாளித்து வருகிறோம். விரைவில் ஆந்திராவிலும் பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப் போகிறார்கள். அதையடுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி வரத்து நின்றுவிடும்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடர்ந்து,பல மாநிலங்களில் கிலோ மூன்று ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.அதையடுத்து, வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அரிசி வரத்தும் நின்றுவிடும். தமிழகத்தில் இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே ஆன்-லைன் வர்த்தகத்தால் தரமான அரிசி கிலோ 50ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமாநில அரிசி வரத்தும் குறைந்தால் அரிசி விலை இரட்டிப்பாகும். ஒரு ரூபாய் அரிசி ஒரு குடும்பத்துக்கு மாதம் முழுவதுக்கும் நிச்சயம் போதாது. அப்படியொரு நிலை வரும்போது,சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்’’என்று நமது அதிர்ச்சியைக் கூட்டினார், கி.வெ.

மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை தரவேண்டும் என காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

2007-ல் இறுதித் தீர்ப்பும் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இன்றுவரை நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலும், தமிழகத்துக்குத் தேவையான நியாயமான நீரைப் பெறுவதிலும் தமிழக அரசு முனைப்புக் காட்டாமல் உள்ளது. இதன் காரணத்தால், தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்துவிட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததால் இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



இயற்கை வேளாண் விவசாயி பாமயனிடம் பேசினோம். ‘‘தமிழகம் உணவுத் தற்சார்பை இழந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகும். மொத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழலை நோக்கிப் போகும். பிறகென்ன? பட்டினிச் சாவுகள் அரங்கேறும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார், பாமயன்.






தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ தேவராசன், ‘‘25.8 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பகுதிகளில் 14 லட்சம் ஏக்கர் மட்டும்தான் தற்போது விவசாயத்துக்குப் பயன்படுகிறது. காவிரி நீரைப் பெறாததால் குறைந்தபட்சம் 2.88 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டால் இந்தப் பாதிப்பு இரட்டிப்பாகும்.

தொடர் மின்தடையால் நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதிகளிலும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதன் காரணங்களால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் உழவர்கள் உள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை மறைமுகமாக விவசாயத் தொழிலை கடுமையாகப் பாதித்து வருகின்றன. இதுவரைக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான பெரிய கட்சிகள் எதுவுமே கர்நாடகாவிடம் தமிழகத்துக்கு நியாயமான பங்கு நீரைக் கோரவில்லை.



காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவிரி மன்ற இடைக்கால ஆணை நடைமுறையில் உள்ளதால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும். ஜூலை வரை கர்நாடகம் தரவேண்டிய 64.87 டி.எம்.சி. நீரையும், ஆகஸ்டில் 54.72 டி.எம்.சி. நீரையும், அக்டோபரில் தரவேண்டிய 30.17 டி.எம்.சி. நீரையும் இதுவரை தமிழக அரசு கோரவில்லை என்பதுதான் யதார்த்தம்!

தமிழக ஆளும்கட்சியும்,எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கைவிட்டு,இடைக்கால ஆணையின்படி நீரைப் பெற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தை மிகப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும்’’ என்றார்.

லாபம் இல்லை!

கிரியேட் அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை விவசாய நெல் குறித்த கருத்தரங்கத்தில், ‘‘பிற விளைபொருள்களோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் நெல் ஒரு லாபகரமான பயிராக இல்லை. மாற்றுப் பயிர்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நன்செய் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 1950-ம் ஆண்டுகளில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76லட்சம் ஏக்கர். தற்போது 54 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது. சராசரியாக நெல் சாகுபடி பரப்பளவில் ஏறத்தாழ 22 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஏறுமுகத்தில் அரிசி விலை!

தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபனிடம் கடந்த 5ஆண்டுகளில் அரிசி விலையேற்றம் எப்படி உள்ளது என்று கேட்டோம்.

‘‘நடுத்தர மக்கள் அதிகமாக வாங்கும் முதல் தர பொன்னி அரிசி 2006-ல் கிலோ 18ரூபாய்க்கும், 2007-ல் இரண்டு ரூபாய் விலையேறி 20 ரூபாய்க்கும், 2008-ல் 22-க்கும், 2009-ல் 28 ரூபாய்க்கும் விற்கபட்டது. இதே அரிசி இந்தாண்டு ஷனவரியில் கிலோவுக்கு பத்து ரூபாய் ஏறி(!) 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டது’’ என்றார் அவர்.

படங்கள்: ம.செந்தில்நாதன், வே.வெற்றிவேல்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் இதழ், 08.08.2010

Wednesday, July 28, 2010

Friday, February 26, 2010

இந்தியாவின் 2010 பட்ஜெட்


இந்திய அரசின் உழவர் விரோத அறிவிப்புகளின் தொகுப்பாகவே 2010-11 க்கான வரவு-செலவு திட்டமும் அதையொட்டிய அறிவிப்புகளும் விளங்குகின்றன.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக வேதியியல் உரங்களின் விலையேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.உரமானியங்களை பெருமளவு திரும்பப் பெற்றுக்கொண்டு அவற்றின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இந்திய அரசு கைவிட்டுவிட்டது.இதன் விளைவாக யூரியா விலை 10விழுக்காடும் பிற உரங்களின் விலை எந்த கட்டுப்பாடின்றியும் கடுமையாக உயர இருக்கின்றன.

இன்னொரு புறம் பி.ட்டி கத்திரிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையையும் கூட விலக்குவதற்கான முயற்சி மாண்சாண்டோ விதை நிறுவனத்தின் வலியுறுத்தலால் தலைமை அமைச்சர் தலைமையிலேயே நடக்கிறது.இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள உயிரி தொழில் நுட்ப வரைவு சட்டம் மரபீனி மாற்ற தொழில் நுட்பத்திற்கு எதிரான விவாதத்தையே மறுத்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு எதிராக கருத்துரைக்கும் உழவர்களையும் அறிவாளர்களையும் கொடுஞ்சிறையில் தள்ளுவதாக மிரட்டுகிறது.இந்திய அரசு உழவர்களை நசுக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணியாற்ற விரும்புகிறது.என்பத்ற்கு இது மேலும் ஒரு சான்று.

நிதியமைச்சர் முன்வைத்துள்ள வரவு-செலவு பெட்ரோல்.டீசல் விலை ஏறத்தாழ ரூ2.75 உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோலிய பொருட்களின் மீதான விலைக்கட்டுபாடுகளை கைவிடுவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.இந்த எரியெண்ணெய் விலை உயர்வு எல்லா பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழி ஏற்படுத்துவதோடு வேளாண்மையையும் கடுமையாக பாதிக்கும்.

””தமிழ்நாட்டை பொறுத்தளவில் இந்த பெட்ரோலி பொருட்களின் விலையேற்றம் தேவையற்றது.தமிழ்நாட்டில் இம்மாநில தேவையை ஏறத்தாழ நிறைவு செய்யும் அளவிற்கு பெட்ரோலிய உற்பத்தி உள்ளது.இங்கு கிடைக்கும் பெட்ரோலியத்தை தூய்மைபடுத்தி தமிழ்நாட்டிற்கு வழங்கினாலே உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விலையை தமிழக மக்களும்,உழவர்களும் சுமக்க வேண்டிய தேவையில்லை.மேலும் பெட்ரோல்,டீசல் விலையில் சுமார் 39 விழுக்காடு இந்திய அர்சு விதிக்கிற வரியின் காரணமாக வ்ருவது.இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் இப்போதுள்ள விலையில் பாதி விலைக்கு பெட்ரோல்,டீசலை தமிழகத்தில் வழங்கமுடியும்.””

எனவே இந்திய அரசு மக்களுக்கும்,உழவர்களுக்கும் எதிராக வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Tuesday, February 16, 2010

கோவை பல்கலைகழகம் மூலமாக பி.ட்டி கத்திரியை உலவவிடாதே!



பி.ட்டி கத்திரி தடையை ஆதரித்தும்,கோவை பல்கலைகழகம் மூலமாக பி.ட்டி கத்திரியை உலவவிட இருக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்தும்..சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணியின் தட்டி..

Sunday, February 14, 2010

காவிரி போராட்ட வீரர் கரூர் P.R.K மறைவு

காவிரி உரிமையை மீட்க தனது இறுதி மூச்சு வரை போராடிய P.R.K என்று அன்புடன் அழைக்கப்பட்ட கரூர் குப்புசாமி அவர்கள் மறைவுக்கு தமிழக உழவர் முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

காவிரி குறித்து குப்புசாமி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்.காவிரி உரிமையை மீட்கும் அவரது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தமிழக உழவர் முன்னணி உறுதி ஏற்கிறது.

Saturday, February 6, 2010

மரபணு மாற்ற கத்திரிக்காயை இந்தியாவில் தடை செய்


04-02-2010

நடுவன் சுற்று சூழல் அமைச்சர் திரு.ஜெய்ராம்ரமேசுக்கு த.உ.மு கோரிக்கை

மரபணுக்களின் தன்மையையும் வரிசையையும் மாற்றி அமைத்து உருவாக்கப்படும் மரபீனி மாற்ற கத்திரிக்காயை உரிய ஆய்வின்றி இந்திய அரசு அனுமதிக்க முன்வருவது ஆபத்தானது.

மரபீனி மாற்றப் பயிர்கள் சாகுபடிச் செலவை பன்மடங்கு அதிகரித்து உழவர்களை கடானாளியாக்குகிறது.மராட்டிய மாநிலம் விதர்ப்பாவிலும்,ஆந்திராவிலும் மரபீனி மாற்றப் பயிரான பீட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் கழுத்துமுட்டும் கடனில் சிக்கி,பல்லாயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டனர்.தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும்,சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பீட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் பேரிழப்புக்கு உள்ளாயினர்.


மரபீனி பயிர்கள் பொருளாதார வகையில் உழவரக்ளுக்கு ஏற்றதல்ல.ஏனெனில் மரபீனி மாற்றப்பயிர்களின் விதையிலிருந்து அதற்கென்றே தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி ஊக்கிகள் வரை அனைத்தும்,அதிகம் செலவு கொண்டவை. அந்த அளவுக்குமரபீனி மாற்றப்பயிர்கள் ஒவ்வாமை,மலட்டுத்தன்மை,கருச்சிதைவு,இரத்த உறைவைக் குறைப்பது,சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தந்த மண்ணுக்குரிய மரபான பயிர்களுடன் மரபீனி மாற்றப்பயிர்களின் மகரந்தங்கள் கலந்து அவற்றை அழித்து விடுகின்றன.இது உணவு பன்மையையும்,உணவு தற்சார்பையும் சீர்குலைக்கும் ஆபத்து உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பன்மையை மரபீனிப்பயிர்கள் ஒழித்துவிடும் என்ற காரணத்தை எடுத்துக்காட்டி முனைவர்.எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான "வேளான்மையில் உயிரித் தொழில் நுட்பப்பயன்பாடு குறித்த செயல்பாட்டுக் குழு" இப்பயிர்களை அங்கு அனுமதிக்கக்கூடாதென எச்சரித்துள்ளது.

மேலும் இச்செயல் விதைகளுக்கும்,பூச்சிகொல்லிகளுக்கும் நிரந்தரமாக அந்நிய நாடுகளை சார்ந்திருக்கச்செய்து நமது வேளான்மையை முடக்கிவிடும் ஆபத்துள்ளது.

ஆகவே இந்திய அரசு மரபீனி மாற்றப்பயிர்கள் அனைத்தையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

நெல் விலை வீழ்ச்சி-அரிசி விலை கடும் உயர்வு குவிண்டால் நெல் ரூ1500 என அறிவிக்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை


03-02-2010

சென்ற ஆண்டு 60கிலோ பிபிடி நெல் ரூ850க்கு விற்றது.இவ்வாண்டு ரூ730 அல்லது ரூ740க்குதான் வாங்கப்படுகிறது

காலம் தாழ்ந்த காவிரி நீர் வரத்து,தாறுமாறான மின்வெட்டு,ஊகிக்க முடியாத உழவுத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு,பருவம் தவரிய மழைப்பொழிவு,நுகர்பொருள்களின் விலையேற்றம் ஆகிய அனைத்து முனைகளிலும் நெருக்குதல்களைச் சந்தித்து உழவர்கள் விலைவித்த நெல்லுக்கு அடிமாட்டு விலை வழங்கப்படுவது உழவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உழவர்கள் விளைவித்த நெல்லின் விலை இவ்வளவு கீழாக அழுத்தப்படும்போதுதான் வெளிச்சந்தையில் அரிசியின் விலை கிலோ 40ரூபாய் என ஏறியுள்ளது.

உழவர்கள் பயன்படுத்தும் பிற நுகர்வு பொருட்களின் விலை இந்த ஓராண்டில் மட்டும் 30விழுக்காடு உயர்ந்துள்ளது.

இவ்வாறு நெருக்கடியில் சிக்கியுள்ள உழவர்களையும் வேளான்மையையும் பாதுகாக்க தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ரூ1500 என அறிவித்து தனியார் வணிகர்களும் இதே விலையை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

Saturday, January 2, 2010

கேரளாவைப் போல் பி.ட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்.


கி.வெங்கட்ராமன்,
ஆலோசகர்,
தமிழக உழவர் முன்னணி

"கேரளாவைப் போல் பி.ட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்" தமிழக அரசுக்கு தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.

மரபணுக்களின் தன்மையையும் வரிசையையும் மாற்றியமைத்து உருவாக்கப்படும் மரபீனி மாற்றப்பயிர்களை உரிய ஆய்வின்றி இந்திய அரசு அனுமதித்து வருகிறது.இது ஆபத்தானது.

மரபீனி மாற்றப்பயிர்கள் சாகுபடி செலவை பன்மடங்கு அதிகரித்து,உழவர்களை கடனாளியாக்கி,கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.மராட்டிய மாநிலம் விதர்ப்பாவிலும்,ஆந்திராவிலும் மரபீனி மாற்றப்பயிரான பி.ட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் கழுத்து முட்டும் கடனில் சிக்கி,பல்லாயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர்.தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும்,சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பி.ட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் பேரிழப்புக்கு உள்ளாயினர்.

ஏனெனில் மரபீனி மாற்றப் பயிர்களின் விதையிலிருந்து அதற்கென்றே தயாரிக்கப்படும் பூச்சி கொல்லி,ஊக்கிகள் வரை அனைத்தும் அதிகம் செலவு கொண்டவை அந்த அளவுக்கு உரிய விளைச்சலும்,விலையும் உழவர்களுக்கு கிடைப்பதில்லை.

மரபீனிப்பயிர்கள் பொருளாதார வகையில் உழவர்களுக்கு ஏற்றதல்ல.

மரபீனி மாற்றப்பயிர்கள் ஒவ்வாமை,மலட்டுத்தன்மை,கருச்சிதைவு,இரத்த உறைவைக் குறைப்பது,சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தந்த மண்ணுக்குரிய மரபான பயிர்களுடன் மரபீனி மாற்றப்பயிர்களின் மகரந்தங்கள் கலந்து அவற்றை அழித்து விடுகின்றன.இது உணவு பன்மையையும்,உணவு தற்சார்பையும் சீர்குலைக்கும் ஆபத்து உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பன்மையை மரபீனிப்பயிர்கள் ஒழித்துவிடும் என்ற காரணத்தை எடுத்துக்காட்டி முனைவர்.எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான "வேளான்மையில் உயிரித் தொழில் நுட்பப்பயன்பாடு குறித்த செயல்பாட்டுக் குழு" இப்பயிர்களை அங்கு அனுமதிக்கக்கூடாதென எச்சரித்துள்ளது.

மேற்கண்ட அனைத்து உண்மைகளையும் எற்றுக் கொண்ட கேரள அரசு தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றப்பயிர்களின் ஆய்வுப் பண்னைகளையும்,விற்பனையையும் தடைசெய்து அறிவித்துள்ளது.இதனை கேரள முதலமைச்சர் 30/11/09 அன்று டெல்லியின் தலைமை அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

இதேபோல் தமிழ்நாட்டிலும் மரபீனி மாற்றப்பயிர்கள் அனைத்தையும் தடை செய்யுமாறு தமிழக அரசை, தமிழக உழவர் முன்னணி கோருகிறது.