Tuesday, December 17, 2013

சிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணி பதாகை.

சிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணி இன்று (17.12.2013) வைத்துள்ள பதாகை.

Monday, December 9, 2013

வேளாண் காப்பீட்டுத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காதே! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.

தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயற்குழு கூட்டம் 8.12.2013 அன்று தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், துணைச்செயலர் இரா.சரவணன், கீரப்பாளையம் ஒன்றிய செயலர் சாக்காங்குடி என்.ஜெயபாலன், குமராட்சி ஒன்றிய செயலர் தங்க.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் சிவபுரி வே.பொன்னுசாமி, மேலமூங்கிலடி சி.இராசேந்திரன், வி.இராஜா, சிவாயம் கோ. நாராயணசாமி, பண்ணப்பட்டு மு.சம்பந்தம், பொன்னந்திட்டு அ.மதிவாணன், சிதம்பரம் ம.கோ.தேவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்., என்ற இந்திய அரசு நிறுவனத்திடம் உள்ள உழவர்களுக்கான பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தை மாற்றி அமைத்து அதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது அதை தமிழக உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இம்முடிவு காப்பீட்டு கட்டணத்தொகை அதிகரிப்பில் முடிவடையும். ஏற்கனவே லாபமற்ற விலையால் நசிந்து வரும் உழவர்கள் மேலும் பாதிக்கப்படுவர். ஆகவே, இந்திய அரசு இம்முடிவை கைவிட வேண்டும்.

2. இம்முடிவை கைவிடும்படி தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

3.அண்மையில் உள்ள புதுச்சேரி அரசு செய்வதைப்போல் உழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணம் முழுவதையும் தமிழக அரசே செலுத்த வேண்டும்.

4. வேளாண் காப்பீட்டுத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி, கையொப்பமியக்கம் நடத்தி இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5.வீராணம் ஏரி நீர் கோரிக்கைகளை ஏற்க கொள்ளிடம் வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரம் அற்று இருப்பதால் வீராணம் ஏரியின் பராமரிப்பு, நீர் நிர்வாகம், நீர்ப்பங்கீடு ஆகிய அனைத்தும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Friday, October 11, 2013

தமிழக உழவர் முன்னணி பதாகை.

தமிழக உழவர் முன்னணி சிதம்பரம் நகரில் இன்று (12.10.2013) அன்று வைத்துள்ள பதாகை.


Sunday, August 11, 2013

செயற்குழு கூட்டம்

நேற்று (10.8.2013) அன்று தமிழக உழவர் முன்னணியின் கடலூர்மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடைபெற்றது. கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தானே புயல் பாதிப்பு - பயிர்க்காப்பீட்டு தொகை சம்பந்தமாக உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. உழவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பயிர்காப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்களை திரட்டி வழக்கு விசாரணைக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.

2. தமிழக உழவர் முன்னணியின் கிராமக்கிளைகளின் உறுப்பினர் புதுப்பித்தலை தொடங்கி இம்மாத இறுதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

3. வருகிற 24.8.2013 அன்று சிதம்பரம் நகரத்தில் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி நகர பொறுப்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.ஆறுமுகம், ஒருங்கினைப்பாளர் ம.கோ. தேவராசன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், குமராட்சி ஒன்றிய செயலாளர் தங்க.கென்னடி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் என். ஜெயபாலன் செயற்குழு உறுப்பினர்கள் அ.மதிவாணன், சி.ராஜேந்திரன், பொன்னுசாமி, எஸ். ராமகிருஷ்ணன், மு.சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Monday, August 5, 2013

காவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு தேவையில்லை என்ற உச்ச நீதி மன்றத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கி.வெங்கட்ராமன் அறிக்கை


தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று (5.8.2013) வெளியிட்டுள்ள அறிக்கை :

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு தொடுத்த வழக்கு 5.8.2013 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தற்போது காவிரியில் தண்னீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் இப்போது அமைக்க தேவை எழவில்லை என்றும் தேவை ஏற்பட்டால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தினை அணுகலாம் என்றும் அறிவித்துவிட்டு வழக்கை 2014 சனவரிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.

உச்ச நீதி மன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு உழவர்களுக்கும், ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இப்போது காவிரியில் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியாத மிகை உபரி நீரே அன்றி நடுவர் மன்றத்தீர்ப்பின்படி கர்நாடகம் திறந்துவிட்ட தண்னீர் அல்ல.

அன்றன்றைக்கு உள்ள பருவ நிலையைப்பார்த்து உச்ச நீதிமன்றம் நிலைப்பாடு மேற்கொள்வது வியப்பளிக்கிறது.

நடுவர் மன்றத்தீர்ப்பின் படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை நிறுவ இந்திய அரசு மறுத்து வருகிறது.  நடுவர் மன்ற தீர்ப்பு  உச்ச நீதி மன்றத்தீர்ப்புக்கு இணையானது. அதனை செயல்படுத்த ஆணையிட வேண்டிய உச்ச நீதிமன்றம் இப்போது தண்ணீர் வருவதை காரணமாக காட்டி தன் கடமையிலிருந்து நழுவுவது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழக அரசு இந்நிலைகளை சுட்டிக்காட்டி விரைந்து விசாரணைக்கு நாள் கேட்பதோடு இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Monday, July 22, 2013

உழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

இன்று (22.07.2013) சிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் இரா. சரவணன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.ஜெயபாலன், குமராட்சி ஒன்றிய செயலாளர் தஙக.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் சிவபுரி வெ.பொன்னுசாமி, பொன்னந்திட்டு அ.மதிவாணன், நாஞ்சலூர் கோ.வெங்கடாசலம், மேலமூங்கிலடி சி.ராஜேந்திரன், பண்ணப்பட்டு மு.சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கடந்த ஆண்டு வறட்சியை காரணம் காட்டி கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய காவிரி நீரை கொடுக்காமல் வஞ்சித்தது. இவ்வாண்டு அணைகளில் நீர் இருந்தும் இறுதி தீர்ப்பின் படி ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய நீரை திறந்து விட வில்லை. ஜூலையில் பெய்யும் கன மழையால் அணைகள் உடைந்து விடாமல் இருக்க திறந்து விடப்படும் நீரை கணக்கில் எடுத்துக் கொண்டு மீதம் 10 டி.எம்.சி நீரை கொடுப்பதாக கூறுகிறது. ஆகஸ்ட் மாத நீர் பற்றி பேச்சில்லை. அதாவது தமிழகத்தை வெறும் வடிகாலாக மட்டுமே பயன் படுத்துவதில் கர்நாடகம் உறுதியாக உள்ளது. கர்நாடக அரசின் இச்செயலை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு இறுதி தீர்ப்பின் படி வாரந்தோறும் தர வேண்டிய நீரை முறையான அறிவிப்பு கொடுத்து திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும். மாதந்தோறும் பெறப்பட வேண்டிய நீர் அம்மாதத்திலேயே பெறப்பட வேண்டும். அதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு அனைத்து கட்சிகள், உழவர் அமைப்புக்கள் கூட்டத்தை கூட்டி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2.ஏற்கனவே வீராணம் ஏரியில் படகு விடும் திட்டம் உழவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. மீண்டும் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கும் திட்டத்தால் ஏரிநீர் மாசுபடும் ஆபத்துள்ளதால் தமிழக அரசு அத்திட்டத்தை கைவிட வேண்டும்.

3. வழங்கப்பட இருக்கும் சென்ற ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையின் விழுக்காட்டை பயிர்க்காப்பீட்டு நிறுவனம் உடனே அறிவிக்க வேண்டும்.

4.வரும் ஆண்டுகளில் உழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும்.

5. சென்ற ஆண்டு உழவர்கள் வாங்கிய கடனுக்காக செலுத்திய பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை(அரசு காப்பீட்டு கட்டணத்தை ஏற்றுக்கொண்டதால்) திருப்பி தரவேண்டும்.

6. கூட்டுறவு பயிர்க்கடன்களின் உச்ச வரம்பை ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சமாக உயர்த்த வேண்டும்.

இத்தீர்மானங்களை நிறைவேற்றித் தரும்படி தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி கோருகிறது.


Tuesday, July 9, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு இன்று (09.07.2013) காலை 10 மணிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்கள்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களின் சிறப்புரை.

Thursday, February 21, 2013

பிப்ரவரி 23 அன்று திருவாரூர் மாவட்டம் அடியக்க மங்கலத்தில், இந்திய அரசின் பெட்ரோல் கிணறு முற்றுகை..! காவிரி மீட்க கட்சி கடந்து களம் காண்போம் !



தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் இனி என்ன செய்யப் போகிறோம் ?” விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம் 06-02-2013 மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டததுக்கு தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் இரா.முரளிதரன் தலைமைத் தாங்கினார். ச.ஞானசேகரன் (மாநில தலைவர், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை), எஸ்.என்.சேகர் (நாகை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கம்) கோ.திருநாவுக்கரசு (தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்), எழிலன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), ப.பெரியார் செல்வம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), இரா.இளங்கோவன் (நாம் தமிழர் கட்சி), எஸ், கார்திகேயன் (மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர இளைஞர் கழகம் ) ப.சுகுமாறன் (மாநில துணைச் செயலாளர், குறளரசுக் கழகம்) த.பன்னீர் செல்வம் ( நகர செயலாளர், ம.தி.மு.க ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக மின்வெட்டும் மின் கட்டண உயர்வும்என்பது குறித்து தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி அவர்களும், “சில்லரை வணிகத்தில் நேரடி அயல் முதலீடுகுறித்து முனைவர் த.செயராமன் அவர்களும் சிறப்புரையாற்றினர். காவிரி நீர் சிக்கல் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தோழர் கி.வெங்கட்ராமன் பேசும்போது காவிரி தீர்ப்பாயம் ஆணையிட்டும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியும் கூட ஒரு சொட்டு தண்ணீரும் தர முடியாது என கர்நாடகம் கொக்கரிக்கிறது. இந்திய அரசின் வலுவான துணையோடு காவிரி உரிமையை கர்நாடகம் மறுத்துள்ளது. காவிரி சிக்கல் வெறும் தண்ணீர் பிரச்சினையல்ல, அது அடிப்படையில் ஒரு இனப் பிரச்சினை. தமிழினத்தின் மீதான ஆரிய இந்தியத்தின் இனப்பகை அரசியலின் வெளிப்பாடு இது.

இதனை வெறும் தண்ணீர் பகிர்வுப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் இதிலுள்ள இனப்பகையை நாம் புரிந்து கொண்டால் தான் காவிரியை மீட்க முடியும். பொருளாதரத்தின் இன்றியமையாத கூறு நீர் வளம். தமிழகத்தின் உயிர் நீரான காவிரியைத் தடுத்து தமிழகத்தின் மீது கர்நாடகம் பொருளாதார தடையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு அதற்குத் துணைபோகிறது.

காவிரி உரிமை மறுக்கும் இந்திய, கர்நாடகம் அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் போராட்டத்தில் தமிழர்கள் இறங்கவேண்டும். தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் பாதைகளை மூடி பொருளாதார தடை ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து மட்டும் நாள்தோறும் கர்நாடகத்துக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது. கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக மின்சாரத்தை நிறுத்த வேண்டும். இலங்கையில் சிங்கள அரசோடு கை கோத்து தமிழினத்தைக் கொன்று குவித்த இந்திய அரசு, அதே இனப் பகையோடு கர்நாடகத்தோடு இணைந்துகொண்டு தமிழினத்தை வஞ்சிக்கிறது. இந்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

காவிரி ஆற்றுப் படுகையான திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு (ONGC) நிறுவனம் அமைத்து பெட்ரோல் - எரிவளி வளத்தை கொள்ளையிட்டு வருகிறது. வருகிற பிரவரி 23 அன்று திருவாரூர் - அடியக்க மங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறுகளை (ONGC) முற்றுகையிடும் போராட்டத்தைகாவிரி உரிமை மீட்புக் குழுஅறிவித்துள்ளது .
காவிரி என்னும் தமிழரின் இயற்கை வளத்தை பாதுகாத்துத் தராத தில்லி அரசே! காவிரி படுகையிலிருந்து கிடைக்கும் மற்றொரு இயற்கை வளமான பெட்ரோலியத்தை எடுக்காதேஎன்ற முழக்கத்தோடு கட்சி வண்ணங்களை கடந்து சாதி வேற்றுமை பாராமல் தமிழர்களாக ஒன்றுபட்டு காவிரியை மீட்க களம் காணவேண்டும்என அப்போது அவர் பேசினார்.

Tuesday, February 12, 2013

தமிழகத்து ஆற்று நீர் உரிமைகளுக்கு கல்லறை கட்டி விட்டது இந்திய அரசு! கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் போராட வீதிக்கு வாருங்கள்!


தமிழக உழவர் முன்னணி_(கட்சி சார்பற்றது)
----------------------------------------------------------------
வேளாண் பெருமக்களே!
மீண்டும் ஒரு இந்திய ஆய்வுக் குழு! குழுவில் வரும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களிடம்(ஐ.எ.எஸ்) மனு கொடுக்கவும், கண்ணீர் விட்டு கதறவும்,காலில் விழவும் தயங்காத உழவர்கள்! அவர்களை வழி நடத்திச் சென்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் உழவர் தலைவர்கள்!
ஒரு பருவ சாகுபடிக்கு எத்தனை முறை இந்தியக்குழு ஆய்வுக்கு வரும்?காவிரி பாசனப் பகுதியின் நீர் தேவையை கணக்கிட அவர்களிடம் அமைப்புகள் இல்லையா?தார்சாலைகளில் ஓரிரு நாள் வந்து பார்வையிடும் அலுவலர்கள் மூலம்தான் நீர் தேவையை அறிந்துக் கொள்ள முடியுமா? சட்டப்படியான நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர வக்கில்லாத இந்திய அரசின் கட்டமைப்புகள் உழவர்களை திசைத் திருப்ப ஆய்வுக் குழுக்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன!
தமிழகத்து ஆற்றுநீர் உரிமையை மீட்க உறுதியாக போராடாத கட்சிகள், விவசாய சங்கங்கள் நிவாரணம் பெற போட்டி போடுகின்ற்ன!
நமது ஆற்றுநீர் உரிமை மீட்கப்பட்டு, வேளாண் விளைப்பொருட்களுக்கு இலாபமான விலைக்கிடைத்து,முறையான பயிர்க்காப்பீடும் இருந்தால் நாம் எவரிடமும் நிவாரணம் கேட்டு கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காதே!
இது பற்றி உழவர் நாம் சிந்திப்பதுண்டா?
கர்நாடகத்தின் நீரை நாம் எடுத்துக்கொண்டதுபோல் அங்குள்ள கட்சிகள் போராடுகின்றன! இங்குள்ள கட்சிகளோ நம்மை வறுமையில் தள்ளிவிட்டு நிவாரணம் கேட்டு போராடுகின்றன!
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்து ஊண்மாலை யவர்...குறள்
உழவுத் தொழில் செய்பவர் பிறரிடம் கையேந்த மாட்டார்! தன்னிடம் கையேந்துபவருக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார்..என்றார் வள்ளுவர்....இவ்வாறு செம்மாந்து வாழ்ந்த வேளாண் மக்களை கையேந்த வைத்துவிட்டது இன்றைய அரசியல்!
நம்மை ஆள்பவர்களும், ஆண்டவர்களும், அவர்களது எடுபிடிகளும்
உழவர்களின் உரிமைக்காக போராடப்போவதில்லை! சரியான அமைப்பை தேர்ந்தெடுத்து, இணைந்து போராட உழவர்களும் பெரும் எண்ணிக்கையில் முன் வரவில்லை.வரும் காலங்களில் ஒரு கையில் சயனைடும், மறுகையில் நிவாரணத்தொகையும் கொண்டுவர போகிறார்கள்! சயனைடை சாப்பிடுங்கள், நிவாரண தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினாலும் உழவர்கள் வரிசையில் நிற்பார்களோ என்னவோ!என்று மிகுந்த துயரத்துடன் நண்பர் ஒருவர் கூறினார்.
தமிழகத்து ஆற்று நீர் உரிமைகளுக்கு கல்லறை கட்டி விட்டது இந்திய அரசு! கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் போராட வீதிக்கு வாருங்கள்!

“ஆலமரத்தடி பஞ்சாயத்து போல கூட உச்சநீதிமன்றம் நடந்துகொள்ளவில்லை” காவிரி உரிமை மீட்பு குழு போராட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தராமல் கர்நாடக அரசுக்கு துணைபோகும் உச்ச நீதிமன்றத்தை கண்டித்து தஞ்சையில் 31-01-2013 வியாழன் அன்று மாலை 5 மணிளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார்.

தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், ம.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் திரு வி.விடுதலைவேந்தன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு தமிழ் நேசன், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் திரு குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, பொறியாளர் திருநாவுக்கரசு (தாளாணமை உழவர் இயக்கம்), செங்கொடிச் செல்வன் (தமிழக விவசாயிகள் சங்கம்), ஜகதீசன் (தமிழக விவசாயிகள் சங்கம்), தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் க செந்திறல் உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட்த்தில் பேசிய தோழர் பெ.மணியரசன், “தமிழகத்துக்குரிய காவிரி உரிமையை மீட்பதில் இந்திய அரசு மட்டுமின்றி, உச்சநீதிமன்றமும் கூட துரோகம் செய்கின்றது. 29.01.2013 அன்று நடந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் ஒன்றாக கர்நாடக அரசு வழக்கறிஞர் நாரிமன் அவர்களை பார்த்து நாங்கள் ஒரு உத்தரவு போடப் போகிறோம், தமிழகத்துக்கு தண்ணீர் விடலாமா? என்று கேட்டனர். அதற்கு கர்நாடக வழக்கறிஞர் நீங்கள் உத்தரவு போடலாம், அதை எங்கள் மக்கள் ஏற்க வேண்டுமே? நாங்கள் எப்படி கூற முடியும்என்று மறுத்தனர்.

அதன் பிறகு உத்தரவு போட இருந்த நீதிபதிகள் தண்ணீர் திறந்துவிட உத்தரவு போடவில்லை. மாறாக, தமிழக அரசு வழக்கறிஞரிடம், நீங்கள் போய் காவிரி ஆணையத்திடம் முறையிட்டு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது. ஆலமரத்தடி பஞ்சாயத்தில் கூட இப்படிப்பட்ட அவலம் இருக்காது. உச்சநீதிமன்றம் மிக மோசமாக காவிரி உரிமையை மீட்கும் வழக்கில் நடந்து கொண்டு, நீதி மறுக்கிறது.

உச்சநீதிமன்றம் இப்படி நழுவி செல்வதற்கு காரணம் இருக்கிறது. இந்திய அரசு தமிழகத்துக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து காவிரியை மறுக்கிறது என்று அது புரிந்துகொண்டு நடுவண் அரசே இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் கர்நாடகம் வருத்தப்படும்படி கூற வேண்டும் என கருதுவதன் வெளிப்பாடு இது.

இந்திய அரசோ, உச்சநீதிமன்றமோ கர்நாடகாவின் முகம் கோணாமல் நடந்துகொள்கிறது. தமிழகத்திற்கு நியாயமான ஏதாவது ஒரு தீர்ப்பை சொன்னால் கூட, அங்கு போராட்டம் நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் எ.பிக்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படிபட்ட போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. எந்த அநீதி இழைத்தாலும் அதை எதிர்த்து எந்த சலனமும் காட்டுவதில்லை தமிழ்நாடு. எனவே தான் அவர்கள் தொடர்ந்து துணிவாக அநீதி இழைக்கின்றனர்.

கர்நாடகம், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி 4 டி.எம்.சி. தண்ணீரைத் தான் குடிநீருக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்நாடகம் வல்லடி வழக்காக, 8 டி.எம்.சி. நீரை எடுத்துக் கொள்வோம் என கூறியதைக் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் நம்மை கைவிட்ட நிலையில், நாம் என்ன செய்ய செய்யப் போகிறோம்?” என கேள்வியெழுப்பி ஆவேசமாக முடித்தார்.

இந்நிலையில், வரும் 23.02.2013 அன்று காவிரி உரிமையைப் பாதுகாக்காத இந்திய அரசு, காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலிய வளத்தை எடுக்காதே என்ற முழக்கத்துடன், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்திலுள்ள இந்திய அரசு எண்ணெய் நிறுவனம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 10, 2013

வீராணம் ஏரி தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்ட அறிவிப்பு! அதிகாரிகள் பேச்சுவார்த்தை ! தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை.


புதிய வீராணம் திட்டம் “ உபரி நீரை எடுக்கும் திட்டமல்ல : உள்ள நீரையும் உறிஞ்சும் திட்டம் என்றும் வீராணம் ஏரியை சிதம்பரம் பொதுப்பணித்துறையிடமிருந்து பிடுங்கி சென்னை மாநகர குடிநீர் வாரியம் வசம் ஒப்படைக்கப்படும் என்றுக் கூறி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்ட தமிழக உழவர் முன்னணி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

உழவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக புதிய வீராணம் திட்டம் தொடங்கிய அன்று , அன்று இருந்த இன்றைய முதலமைச்சர் வேளாண்மையை பாதிக்காமல் உபரி நீரை மட்டுமே வீராணத்திலிருந்து சென்னைக்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.
ஆனால், வீராணம் ஏரி முழுமையாக நிறைந்திருந்தும் உரிய காலத்தில் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படவில்லை.  நீர் இன்றி வேளாண்மை நொடிந்து பயிர்கள் காய்கின்றன.  ஆனால் சென்னைக்கு தொடர்ந்து நீர் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து வீராணம் ஏரி சிதம்பரம் பொதுப்பணித்துறையி கீழ் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும், உழவர்களுக்கு உடனடியாக உரிய நீரை திறந்து விடவேண்டும், வீராணம் ஏரி நீர் மேலாண்மையைக் கண்காணிக்க உழவர்கள் அடங்கிய குழுவை  ஏற்படுத்த வேண்டும் என்று கோரியும் கடலூர் மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன் படி இன்று காலை 10 மணி அளவில் சேத்தியாத்தோப்பு , வீராணம் நீரேற்றும் நிலையம் எதிரில் உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம் தலைமையில் மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான உழவர்கள் போராட்டத்துக்கு வந்துகொண்டிருந்தனர்.  தகவல் அறிந்த துணை கண்காணிப்பாளர், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உழவர் முன்னணி அமைப்பினருடன் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

  “  வேளாண்மைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடவடிக்கைகளை கண்காணித்து ஓரிரு நாட்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் ” எனவும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சிதம்பரம்  கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் உழவர் முன்னணி அமைப்பினரிடம் தண்ணீர் திறந்துவிட விரைந்து நடவடிகைகள் எடுத்துவருவதாக கோட்டாட்சியர் இல.சுப்பரமணியம் உறுதியளித்ததின் பேரில் இன்று நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  

Wednesday, January 2, 2013

உழவர்கள் கட்சி கடந்து திரள வேண்டும்” – தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!




உழவர்கள் கட்சி கடந்து திரள வேண்டும்” என தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

அடயாளம் சிறு அணைக்கட்டிலிருந்து நடப்பு நிதியாண்டிலேயே வாய்க்கால் வெட்ட நிதி ஒதுக்கி செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி மற்றும் தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் இன்று (31.12.2012),இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில்உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு திரு தூ.தூருவாசன் (தமிழக உழவர் முன்னணிதலைமையேற்றார். தென்பெண்ணைக் கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு இலங்கனம்பட்டி கிளைச் செயலாளர் திருசெ.தேவராசன் வரவேற்புரையாற்றினார்தமிழக உழவர் முன்னணியாளர்கள் லிங்கனம்பட்டி திருநிர்மலாகொப்பக்கரை திருகாவேரிதிரு பெ.திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பின் ஆலோசகரும்தமிழக இளைஞர் முன்னணித் தலைவருமான தோழர் கோ.மாரிமுத்துஅளேசிபம் கிளைச் செயலாளர் திரு.அனுமந்தப்பாஅயர்னப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் திருபாப்பண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும்ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிறைவாக கோரிக்கை குறித்துதமிழக உழவர் முன்னணி ஆலோசகரும்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றினார்அவர் பேசுகையில்வேளாண்மைக்காக நீரின்றி தவிக்கும்அடயாளம் பகுதியில் வாய்க்கால் மூலம் 12 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏரிகுளம்,குட்டைகளில் நீரினை நிரப்ப வாய்ப்புள்ளது. அப்படி நிரப்பப்பட்டால் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்பாகவும் அது அமையும் என்று கருதி தான்கடந்த 20 ஆண்டுகளாக,இப்பகுதியில் வாய்க்கால் வெட்ட வேண்டுமெனத் தொடர்ந்து தனிநபர்களாலும்பல்வேறு அமைப்புகளாலும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

டயாளம் அணையிலிருந்து தொடங்கி தென் பெண்ணை கிளை வாய்க்கால் அமைத்திடும்இந்த எளிய திட்டத்திற்கு கூட நிதி ஒதுக்காமல் தமிழக அரசு புக்கணித்து வருகிறது.இராயக்கோட்டை பகுதியில் தக்காளிகாய்கறி சாகுபடிகள் முக்கியமானவை. ஆனால் இங்கு ஒரு குளிர்பதன கிடங்குகூட அமைக்கப்படவில்லைஇதனால்எளிதில் அழுகும் பொருட்களை விளைவிக்கும் உழவர்கள்வணிகர்களின் தயவில் விடப்படுகிறார்கள்இந்த குளிர்பதன கிடங்கு அமைக்கும் எளியத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த மறுக்கிறது அரசு.இதற்கான அடிப்படை காரணம்உழவர்களை வேண்டாதவர்களாகஇந்தியதமிழக அரசு நினைத்துக் கொண்டுள்ளதே ஆகும் 

அண்மையில் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியே வேண்டும் என்று கூறியிருப்பது இந்திய அரசின் கொள்கை நோக்கத்தை வெளிப்படுத்துகிறதுஇடுபொருட்களின் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிற இந்திய அரசுஇதையேக் காரணமாகக் கூறி உழவர்களை வேளாண்மையை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.

உழவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அந்நிலங்களை பெரும் தொழில் நிறுவங்களுக்குபெரும் பண்ணைகள் அமைத்துக் கொள்ள உதவும் வகையில் வழங்க விரும்புகிறதுமக்களின் உணவு தேவைக்கு இக்குமதி செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறது. இவ்வாறான உழவர் விரோத போக்குகளை எதிர்த்து போராடுவதுக்கு தேர்தல் கட்சிகளுக்கு தெம்பு கிடையாதுனெனில்இக்கட்சிகளை கம்பெனிகளே நடத்துகின்றன.எனவே உழவர்கள் கட்சி கடந்து ஒன்று திரண்டு தொடர்ந்து போராட வேண்டும்” என பேசினார்.

எழுச்சியோடு நடைபெற்ற இவ் உண்ணாநிலை போராட்டத்தில், 12 ஊராட்சிகளை சேர்ந்த உழவர்களும்ஊர் பொது மக்களும்தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்னர்.