Saturday, January 12, 2013
Thursday, January 10, 2013
வீராணம் ஏரி தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்ட அறிவிப்பு! அதிகாரிகள் பேச்சுவார்த்தை ! தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை.
1:42 AM
No comments
புதிய வீராணம் திட்டம் “ உபரி நீரை எடுக்கும் திட்டமல்ல :
உள்ள நீரையும் உறிஞ்சும் திட்டம் என்றும் வீராணம் ஏரியை சிதம்பரம் பொதுப்பணித்துறையிடமிருந்து பிடுங்கி சென்னை மாநகர குடிநீர் வாரியம் வசம்
ஒப்படைக்கப்படும் என்றுக் கூறி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்ட
தமிழக உழவர் முன்னணி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
உழவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக புதிய வீராணம்
திட்டம் தொடங்கிய அன்று , அன்று இருந்த இன்றைய முதலமைச்சர் வேளாண்மையை பாதிக்காமல்
உபரி நீரை மட்டுமே வீராணத்திலிருந்து சென்னைக்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.
ஆனால், வீராணம் ஏரி முழுமையாக நிறைந்திருந்தும் உரிய
காலத்தில் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படவில்லை. நீர் இன்றி வேளாண்மை நொடிந்து பயிர்கள்
காய்கின்றன. ஆனால் சென்னைக்கு தொடர்ந்து
நீர் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து வீராணம் ஏரி சிதம்பரம்
பொதுப்பணித்துறையி கீழ் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும், உழவர்களுக்கு உடனடியாக
உரிய நீரை திறந்து விடவேண்டும், வீராணம் ஏரி நீர் மேலாண்மையைக் கண்காணிக்க
உழவர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த
வேண்டும் என்று கோரியும் கடலூர் மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன் படி இன்று காலை 10 மணி அளவில் சேத்தியாத்தோப்பு ,
வீராணம் நீரேற்றும் நிலையம் எதிரில் உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம்
தலைமையில் மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான உழவர்கள்
போராட்டத்துக்கு வந்துகொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த துணை கண்காணிப்பாளர், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர்
உள்ளிட்ட அதிகாரிகள் உழவர் முன்னணி அமைப்பினருடன் போராட்டத்தை கைவிடுமாறு
பேச்சுவார்த்தை நடத்தினர்.
“ வேளாண்மைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான
ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடவடிக்கைகளை கண்காணித்து ஓரிரு நாட்களில் தண்ணீர்
திறந்துவிடப்படும் ” எனவும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சிதம்பரம்
கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் உழவர் முன்னணி
அமைப்பினரிடம் தண்ணீர் திறந்துவிட விரைந்து நடவடிகைகள் எடுத்துவருவதாக
கோட்டாட்சியர் இல.சுப்பரமணியம் உறுதியளித்ததின் பேரில் இன்று நடைபெறவிருந்த போராட்டம்
தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Wednesday, January 2, 2013
உழவர்கள் கட்சி கடந்து திரள வேண்டும்” – தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
1:06 AM
No comments
“உழவர்கள் கட்சி கடந்து திரள வேண்டும்” என தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
அடயாளம் சிறு அணைக்கட்டிலிருந்து நடப்பு நிதியாண்டிலேயே வாய்க்கால் வெட்ட நிதி ஒதுக்கி செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி மற்றும் தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் இன்று (31.12.2012),இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு திரு தூ.தூருவாசன் (தமிழக உழவர் முன்னணி) தலைமையேற்றார். தென்பெண்ணைக் கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு இலங்கனம்பட்டி கிளைச் செயலாளர் திரு. செ.தேவராசன் வரவேற்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணியாளர்கள் லிங்கனம்பட்டி திரு. நிர்மலா, கொப்பக்கரை திரு. காவேரி, திரு பெ.திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பின் ஆலோசகரும், தமிழக இளைஞர் முன்னணித் தலைவருமான தோழர் கோ.மாரிமுத்து, அளேசிபம் கிளைச் செயலாளர் திரு.அனுமந்தப்பா, அயர்னப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் திரு. பாப்பண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிறைவாக கோரிக்கை குறித்து, தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், “வேளாண்மைக்காக நீரின்றி தவிக்கும்அடயாளம் பகுதியில் வாய்க்கால் மூலம் 12 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏரி, குளம்,குட்டைகளில் நீரினை நிரப்ப வாய்ப்புள்ளது. அப்படி நிரப்பப்பட்டால் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்பாகவும் அது அமையும் என்று கருதி தான், கடந்த 20 ஆண்டுகளாக,இப்பகுதியில் வாய்க்கால் வெட்ட வேண்டுமெனத் தொடர்ந்து தனிநபர்களாலும், பல்வேறு அமைப்புகளாலும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
அடயாளம் அணையிலிருந்து தொடங்கி தென் பெண்ணை கிளை வாய்க்கால் அமைத்திடும்இந்த எளிய திட்டத்திற்கு கூட நிதி ஒதுக்காமல் தமிழக அரசு புறக்கணித்து வருகிறது.இராயக்கோட்டை பகுதியில் தக்காளி, காய்கறி சாகுபடிகள் முக்கியமானவை. ஆனால் இங்கு ஒரு குளிர்பதன கிடங்குகூட அமைக்கப்படவில்லை. இதனால், எளிதில் அழுகும் பொருட்களை விளைவிக்கும் உழவர்கள், வணிகர்களின் தயவில் விடப்படுகிறார்கள். இந்த குளிர்பதன கிடங்கு அமைக்கும் எளியத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த மறுக்கிறது அரசு.இதற்கான அடிப்படை காரணம், உழவர்களை வேண்டாதவர்களாக, இந்திய, தமிழக அரசு நினைத்துக் கொண்டுள்ளதே ஆகும்.
அண்மையில் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருப்பது இந்திய அரசின் கொள்கை நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இடுபொருட்களின் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிற இந்திய அரசு, இதையேக் காரணமாகக் கூறி உழவர்களை வேளாண்மையை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.
உழவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அந்நிலங்களை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு, பெரும் பண்ணைகள் அமைத்துக் கொள்ள உதவும் வகையில் வழங்க விரும்புகிறது. மக்களின் உணவு தேவைக்கு இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறது. இவ்வாறான உழவர் விரோத போக்குகளை எதிர்த்து போராடுவதுக்கு தேர்தல் கட்சிகளுக்கு தெம்பு கிடையாது. ஏனெனில், இக்கட்சிகளை கம்பெனிகளே நடத்துகின்றன.எனவே உழவர்கள் கட்சி கடந்து ஒன்று திரண்டு தொடர்ந்து போராட வேண்டும்” என பேசினார்.
எழுச்சியோடு நடைபெற்ற இவ் உண்ணாநிலை போராட்டத்தில், 12 ஊராட்சிகளை சேர்ந்த உழவர்களும், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)