Saturday, January 2, 2010

கேரளாவைப் போல் பி.ட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்.


கி.வெங்கட்ராமன்,
ஆலோசகர்,
தமிழக உழவர் முன்னணி

"கேரளாவைப் போல் பி.ட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்" தமிழக அரசுக்கு தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.

மரபணுக்களின் தன்மையையும் வரிசையையும் மாற்றியமைத்து உருவாக்கப்படும் மரபீனி மாற்றப்பயிர்களை உரிய ஆய்வின்றி இந்திய அரசு அனுமதித்து வருகிறது.இது ஆபத்தானது.

மரபீனி மாற்றப்பயிர்கள் சாகுபடி செலவை பன்மடங்கு அதிகரித்து,உழவர்களை கடனாளியாக்கி,கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.மராட்டிய மாநிலம் விதர்ப்பாவிலும்,ஆந்திராவிலும் மரபீனி மாற்றப்பயிரான பி.ட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் கழுத்து முட்டும் கடனில் சிக்கி,பல்லாயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர்.தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும்,சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பி.ட்டி பருத்தி சாகுபடி செய்த உழவர்கள் பேரிழப்புக்கு உள்ளாயினர்.

ஏனெனில் மரபீனி மாற்றப் பயிர்களின் விதையிலிருந்து அதற்கென்றே தயாரிக்கப்படும் பூச்சி கொல்லி,ஊக்கிகள் வரை அனைத்தும் அதிகம் செலவு கொண்டவை அந்த அளவுக்கு உரிய விளைச்சலும்,விலையும் உழவர்களுக்கு கிடைப்பதில்லை.

மரபீனிப்பயிர்கள் பொருளாதார வகையில் உழவர்களுக்கு ஏற்றதல்ல.

மரபீனி மாற்றப்பயிர்கள் ஒவ்வாமை,மலட்டுத்தன்மை,கருச்சிதைவு,இரத்த உறைவைக் குறைப்பது,சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தந்த மண்ணுக்குரிய மரபான பயிர்களுடன் மரபீனி மாற்றப்பயிர்களின் மகரந்தங்கள் கலந்து அவற்றை அழித்து விடுகின்றன.இது உணவு பன்மையையும்,உணவு தற்சார்பையும் சீர்குலைக்கும் ஆபத்து உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பன்மையை மரபீனிப்பயிர்கள் ஒழித்துவிடும் என்ற காரணத்தை எடுத்துக்காட்டி முனைவர்.எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான "வேளான்மையில் உயிரித் தொழில் நுட்பப்பயன்பாடு குறித்த செயல்பாட்டுக் குழு" இப்பயிர்களை அங்கு அனுமதிக்கக்கூடாதென எச்சரித்துள்ளது.

மேற்கண்ட அனைத்து உண்மைகளையும் எற்றுக் கொண்ட கேரள அரசு தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றப்பயிர்களின் ஆய்வுப் பண்னைகளையும்,விற்பனையையும் தடைசெய்து அறிவித்துள்ளது.இதனை கேரள முதலமைச்சர் 30/11/09 அன்று டெல்லியின் தலைமை அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

இதேபோல் தமிழ்நாட்டிலும் மரபீனி மாற்றப்பயிர்கள் அனைத்தையும் தடை செய்யுமாறு தமிழக அரசை, தமிழக உழவர் முன்னணி கோருகிறது.

0 கருத்துகள்:

Post a Comment