Wednesday, September 15, 2010

மாற்று மின் மோட்டார் வழங்கும் திட்டம் தமிழக உழவர் முன்னணி முதல்வருக்கு கோரிக்கை!


மின் சேமிப்பை கருதி தமிழக உழவர்களுக்கு மாற்றுமின் மோட்டார்கள் தமிழக அரசு வழங்க உள்ள திட்டத்தை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

இத்திட்டத்தால் பயன் பெரும் உழவர்களுக்கு கீழ்கண்ட வகையில் முன்னுரிமைக் கொடுத்து மின்மோட்டார்களை வழங்கலாம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் மின்மோட்டார் இணைப்புகளை அவை இணைப்பு பெறப்பட்ட ஆண்டின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரித்து மிகப் பழமையான மின்மோட்டார்களுக்கு முதலில் என்ற வரிசையில் மின்மோட்டார்களை வழங்கலாம்.அவ்வாறு வழங்கும்போது,மின் இணைப்பு பெற்ற தேதியில் இருந்த குதிரைத்திறன் தொடர்ந்து இன்று வரை பயன்பாட்டில் இருந்தால் அவர்களுக்கு முதலாவதாக வழங்கலாம்.

இடையில் கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார்களை அனுமதி பெற்று பொருத்தி இயக்கிவருபவர்களுக்கு அடுத்தும்,அனுமதிபெறாமல் கூடுதல் குதிரைச்சக்தியை பயன்படுத்தி வந்தால் அவர்களை தானே முன்வந்து அறிவிக்கும் திட்டத்தின் கீழ்.(Voluntary Disclosure Scheme) வாய்ப்புக்கொடுத்து கூடுதல் மின்சுமைக்கு அனுமதி வழங்கி அதற்கடுத்து அவர்களுக்கு மின்மோட்டார்கள் வழங்கலாம்.

மேலும் உழவர்களை பெரிய,சிறு,குறு விவசாயிகள் என்ற பாகுபாடு செய்யாமல் மின்மோட்டார்கள் பயன்படுத்தும் அனைத்து உழவர்களுக்கும் புதிய மின் மோட்டார் வழங்கவேண்டும்.

அடுத்து அண்மையில் புதிய மின் மோட்டாரை வாங்கி பொருத்தி பயன்படுத்திவரும் உழவர்களுக்கு மீண்டும் புதிய மின் மோட்டார் வழங்குவதற்கு பதிலாக பயன்பாட்டில் உள்ள மோட்டாருக்கு உரிய தொகையை பணமாக வழங்கிட வேண்டும்.

இத்திட்டத்தால் அனைத்து உழவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கிலும் சிலருக்கு சலுகைக் காட்டப்படுகிறது என்ற குறை கூறுதலை தவிர்க்கும் பொருட்டும் மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

0 கருத்துகள்:

Post a Comment