Friday, October 29, 2010

கரைபுரண்டு ஓடினாலும் காவிரி நீர் கிடையாது!கர்நாடக அரசு கதவை சாத்தியது, இயலாத ஆட்சி நடத்தும் தமிழக அரசே! பொதுப்பணித்துறை அலுவலகத்தை இழுத்து மூடு!



கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் 27.10.2010 அன்று நடைப்பெற்ற கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டம் “காவிரி நீரை திறந்து விடவே முடியாது; அணை நிரம்பி வழிந்தால் தானாகவே தமிழகதிற்கு நீர் ஓடும்”,என்று அறிவித்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை “12408 அடி மொத்த உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 124.7 அடிக்கு தண்ணீர் உள்ளது.கர்நாடக கவிரி அணைகளில் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சியில் 100 டி.எம்.சி.தண்ணீர் நிரம்பியுள்ளது.ஆயினும் இதை கர்நாடகதின் பாசன மற்றும் பெங்களூர்,மைசூர் குடிநீர் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வோம்.தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அணை நிரம்பினால் இயற்கையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழிந்து ஓடும்”என்று அறிவித்தார்.

இயலாத ஆட்சியாய் தமிழக அரசு இருப்பதால் அயலார் காவிரி உரிமையை எளிதாக மறுக்கிறார்கள்.

நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய காவிரிநீரை பெற்றுத்தர முயலாத,தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் தமிழகத்தில் செயல்படுவதால் இருக்கிற தண்ணீருக்கு உழவர்களிடையேயும்,உழவர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் நிகழப்போவதிலை.

எனவே காவிரி நீரைப்பெற்றுத்தர இயலாத தமிழக அரசு பொதுப்பணித்துறை அலுவலகங்களை இழுத்து மூடும்படி தமிழக உழவர் முன்னணி வலியுறுத்துகிறது.

-------------------------------------------------------------------------------------
இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம்தர விரும்பவில்லை --- முதலமைச்சர் மு.கருணாநிதி.
------------------------------------------------------------------------------------------நன்றி : தினமணி 29.10.2010

0 கருத்துகள்:

Post a Comment